நாகர்கோவில், ஏப். 16 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எம் ஆர் காந்தி இன்று தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலையில் வடசேரி தழுவிய மகாதேவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் சக்தி கார்டன், எஸ் எம் ஆர் வி பள்ளிசாலை, ஆறாட்டு ரோடு வழியாக சென்றவர் காட்டுநாயக்கன் தெரு, ஒழுகினசேரி சந்திப்பு பகுதிகளில் திரண்டு இருந்த மக்களிடையே உரையாற்றினார்.
தொடர்ந்து அவர் திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் பேசுகையில்: நாகர்கோவில் தொகுதியில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். பிரதமர் மோடியின் வருகையால் மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் இது எனக்கு பெரும் வெற்றியை தேடி தரும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்த எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். சட்டமன்றத்தில் உங்கள் குரலாக என குரல் ஒலிக்கும் என கூறினார்.
தொடர்ந்து மதியத்துக்கு பிறகு முதலியார் தெரு, பெரிய ராஜசிங்கம் தெரு, பயோனியர் தெரு மற்றும் ஆதிபராசக்தி கோவில் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டியவர் பின்னர் உச்சி காளியம்மன் கோவில் மற்றும் டபுள்யூ சி சி சந்திப்பு பகுதியில் பிரச்சாரம் செய்தார். மாலை வேளையில் வாத்தியார் விளை சந்திப்பு, சிவதாணு கல்யாண மண்டபம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் ஆதரவு திரட்டினார்.
இரவு களியங்காடு, கட்டையன்விளை, பார்வதிபுரம், கிறிஸ்து நகர் போன்ற பகுதியில் திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்து இறுதியாக இரவு 8.30 மணி அளவில் முத்தாரம்மன் திருக்கோவில் பகுதியில் தனது பிரச்சாரத்தை எம்.ஆர்.காந்தி நிறைவு செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் வேதாந்தம், மாவட்ட பொருளாளர் முத்துராமன், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



