நாகர்கோவில், ஏப். 15 –
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பு பகுதியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் ரவுண்டானா நோக்கி இன்று கார் ஒன்று வேகமாக சென்றது. இந்த கார் அந்த பகுதியில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி அருகே செல்லும்போது அந்த வழியாக உள்ள இணைப்பு சாலையில் இருந்து பைக் ஒன்று வந்தது. வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
இதில் பைக்கை ஒட்டி வந்த வாலிபர் பைக் உடன் காரின் அடியில் சிக்கினார். சுமார் 50 அடி தூரத்திற்கு மேல் கார் அடியில் சிக்கிய வாலிபர் இழுத்து செல்லப்பட்டார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். பின்னர் பொதுமக்கள் சேர்ந்து காரின் அடியில் சிக்கி இந்த வாலிபரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வெட்டூர்ணிமடம் சந்திப்பதிலிருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டான சந்திப்பு வரை சாலைகள் செங்குத்தாக இறங்கும் தன்மை கொண்டது. இந்த சாலையில் இணைப்பு சாலைகள் ஏராளமாக உள்ளன. இணைப்பு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி இது போன்ற விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றது. எனவே இணைப்பு சாலை பகுதியில் பேரிகார்டு அல்லது வேகத்தடைகள் அமைத்து வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



