தஞ்சாவூர், செப்டம்பர் 23 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் சமூக நீதி விடுதியை அமைச்சர்கள் கோவி.செழியன், மெய்யநாதன் திறந்து வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி தெற்கு தோட்டம் கிராமம் புதிய வீட்டுவசதிவாரியம் உள்ள முல்லை நகரில் உள்ள தற்காலிக கட்டிடத்தில் மாணவிகளுக்கான சமூக நீதி விடுதியை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்.
முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திர சேகரன், டி கே ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவிகள் பயன் பெறும் வகையில் புதிதாக சமூக நீதி விடுதி தொடங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கான தஞ்சாவூர் சமூகநீதி விடுதி (கல்லூரி மாணவியர்) தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சாவூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய விடுதிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் தலா 100 கல்லூரி மாணவிகள் வீதம் 500 மாணவிகள் தங்கி கல்வி பயில இயலும். மேலும் இதர பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இதனைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை சார்பில் சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை, சலவை பெட்டி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர், தாசில்தார் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



