மார்த்தாண்டம், ஏப். 7 –
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் என்பவர் போட்டியிடுகிறார். இவரை காங்கிரஸ் கட்சியின் தலைமையின் முழு ஆதரவுடன் வேட்பாளராக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரவீனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்ததற்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரசார் கடும் அதிர்ச்சியுடன் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த தொகுதியை பொருத்தமட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுதிக்கு வெளியில் உள்ள நபர்களை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்த முறை விளவங்கோடு தொகுதியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரவின் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் எழுதுள்ளது.
ஆனால் பிரவீன் தொகுதிக்கு உட்பட்ட தமிழக பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் சிலர் அவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் என்று பரப்புரை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரவீன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் குமரி மாவட்ட முகவரி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜோஸ்லால் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் போன்ற நபர்கள் பிரபீனுக்கு கேரளாவிலும் தமிழகத்திலும் வாக்குரிமை உள்ளது எனவும், அதிகப்படியான குற்ற வழக்குகள் உள்ளது எனவும் கூறி வேட்பு மனு பரிசீலிக்க கூடாது என புகார் அளித்தனர்.
இதை அடுத்து பிரவீனின் வேட்பு மனு பரிசீலிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் அதிகாரி இன்று மதியம் 2:30 மணிக்குள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க பிரவின் தரப்பிடம் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தல் அதிகாரியிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தார்.
அதில் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பிரவீனின் பெயர் கேரளா உள்ளிட்ட இரண்டு இடங்களில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. குற்ற வழக்குகளிலும் பல வழக்குகள் முடிந்து விட்டதாகவும் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பிரவினின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டது.



