நாகர்கோவில், ஏப். 6 –
சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, வேட்புமனு தாக்கல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு தோவாளை (இ) பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்திலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெறப்பட்டு வருகின்றன.
வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்று வருகிறது. இன்று 06.04.2025 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வரும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் அதற்கான அறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேட்புமனு தாக்கலின் போது அலுவலகத்தைச் சுற்றி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வேட்பாளருடன் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் வாகனக் கட்டுப்பாடு குறித்தும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் எஸ்.காளீஸ்வரி, குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கலைமதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தூர் ராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர்கள் துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



