புதுக்கடை, ஏப். 8 –
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பகுதியில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒரு நபரை பார்த்து அவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதை அடுத்து அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரது டவுசர் பாக்கெட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் வேங்கோடு பகுதியை சேர்ந்த ஜாண் டேனியல் (34) என்பதும், ஆனால் பெங்களூரில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இந்த நிலையில் கஞ்சாவுடன் தேங்காபட்டனம் மீன் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் இவர் பிடிபட்டுள்ளார். இதனால் கஞ்சாவை எங்கிருந்து கொண்டு வந்தார்? எதற்காக கொண்டு வந்தார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


