நாகர்கோவில், ஏப். 02 –
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமாவை தெரியப்படுத்தாமல் இரண்டு நாட்களாக மூடி மறைத்த ஆணையர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பல்வேறு தரப்பினர் கோரிக்கை.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக (2024 முதல்) நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்று தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் 2018 ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
இவர் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் இன்று வரை திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வருவதாக இவர் மீது மாற்று கட்சியினர் குற்றம் சாட்டிய சம்பவமும் உண்டு.
இதற்கு எடுத்துக்காட்டாக இவர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்- ன் காலை ஆய்வு திட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒரு ஆணையராக செயல்படாமல் மேயரின் தீவிர ஆதரவாளராகவே செயல்பட்டார் என்பதே சான்று.
இவரின் பணி மாறுதலை அப்போது மேயராக இருந்த மகேஷ் தடுத்து நிறுத்தி இவரை தன் பக்கம் வைத்துக் கொண்டதாக பரவலாக பேசப்பட்டது. இவரின் ஒவ்வொரு அசைவும் மேயரின் நிழலை சார்ந்தே இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவருக்கு மேயர் மகேஷ் மீது அளவு கடந்த பாசமும், நம்பிக்கையும், விசுவாசமும் உண்டு.
மேலும் மேயர் மகேஷ் ராஜினாமா செய்து 24 மணி நேரம் ஆகியும் அந்த தகவல் வெளியே கசிந்து விடாமல் மிகவும் சிறப்பாக பாதுகாத்து மேயர் மகேஷின் நம்பிக்கைக்குரிய ஆணையர் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் இந்த சமயம் மேயரின் ராஜினாமாவை 24 மணி நேரத்துக்கு மேலாக மறைத்து பொது மக்களுக்கு தெரியாத வண்ணம் மேயர் மகேஷ் தற்போதும் மேயராக நீடிப்பதை போல் காண்பிக்க உதவிய ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், இவர் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியில் நீடிப்பார் என்றால் தன்னுடைய விசுவாசத்தை முன்னாள் மேயர் மகேஷுக்கு காண்பிக்கும் பொருட்டு அவருக்கு ஆதரவாகவும், சாதகமாகவும் நடந்து இந்த தேர்தலில் மேயர் மகேஷ்க்கு ஆதரவு திரட்டுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் இவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
எனவே இந்திய தேர்தல் ஆணையம் மேயர் மகேஷ் ராஜினாமா செய்த உண்மை சம்பவத்தை மறைத்து தொடர்ந்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவரும் நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்யாமல், தரம் இல்லாத சாலை மற்றும் சாக்கடை பணிகளுக்கு அனுமதி வழங்கி கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு இருந்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஒரு தரப்பினரை சார்ந்து செயல்படும் சில அதிகாரிகள் தங்களை திருத்திக் கொண்டு பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த மாட்டார்கள் தேர்தலும் ஜனநாயக முறையில் நடைபெறும் என்பது என்னவோ நிசப்தமான உண்மை.
நடவடிக்கை எடுக்குமா இந்திய தேர்தல் ஆணையம்?



