கிருஷ்ணகிரி, ஏப். 1 –
கிருஷ்ணகிரியை அடுத்த சூளகிரியில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசனை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசனை தலைமை கழகம் அறிவித்தது, இதனைத் தொடர்ந்து மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேப்பனப்பள்ளி தொகுதியில் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து சூளகிரியில் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின்: தளி, ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரித்து விட்டு இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. பொதுமக்கள் இருப்பார்களா என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் கட்டுக்கடங்காத பொதுமக்கள் காத்திருந்து சிறப்பான வரவேற்பு அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார். ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை விட கூடுதலாக மக்களுக்கு செய்துள்ளார்.
டெல்லி டீமுக்கு எடப்பாடி பழனிசாமி முதல் அடிமையாகவும், இரண்டாவது அடிமையாக கே.பி.முனுசாமி உள்ளதாகவும் தெரிவித்தார். வேப்பனப்பள்ளி தொகுதி வளர்ச்சிக்காக சீனிவாசன் வாரத்திற்கு ஒரு முறை தலைமை அலுவலகத்திற்கு வந்து மனுவை வழங்குவார். அதை முதலமைச்சர் பரிசீளித்து வேப்பனப்பள்ளி தொகுதி வளர்ச்சிக்கு நிறைய திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே நிறைவேற்றியுள்ளார். முதலமைச்சர் மகனாகவும், கலைஞர் கருணாநிதி பேரனாகவும், உங்களில் ஒருவனாகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
சீனிவாசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஏராளமான திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டு மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஒன்றிய கழக செயலாளர் நாகேஷ், பாக்யராஜ், வேட்பாளர் சீனிவாசன் உதவியாளர் கார்த்திக், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



