சுசீந்திரம், மார். 30 –
தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களில் பறக்கை மது சூதனப்பெருமாள் கோவிலும் ஒன்று இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் கொடியேற்றுத்துடன் திருவிழா துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டு பங்குனி மாத திருவிழாவிற்காக கடந்த 22 ஆம் தேதி காலை கொடியேற்றுத்துடன் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெருமாள் அம்பாள் கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. ஐந்தாம் திருவிழா அன்று கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை 9:30 மணிக்கு துவங்கப்பட உள்ளது. இதில் விநாயகர் தேர், சுவாமி தேர் ஆகிய தேர்களில் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளை தேரில் அமரச் செய்து ரத வீதியை பக்தர்கள் ஒரு முறை இழுத்து வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சப்த வர்ணா நிகழ்ச்சியும் 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வேட்டைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
10-ம் திருவிழாவான 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி மேளதாளங்கள் முழங்க ஆரட்டு துறைக்கு எழுந்தருழும் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் ஊழியர்கள், மதுசூதனப்பெருமாள் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.


