கருங்கல், மார்ச் 27 –
கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டியன் பாபு (48). அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நர்சாக உள்ளார். இவர்களது 14 வயது மகன் மைலோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள அறையில் தூங்குவதற்காக மாணவன் சென்றுள்ளார்.
அடுத்த நாள் காலையில் மகனை தாயார் எழுப்ப அறைக்கு வந்த போது அவனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது மாணவன் கப்பியறை, புங்கறை போன்ற பகுதி வழியாக ஓடிச் செல்வதும் பின்னால் நாய்கள் துரத்தியதையடுத்து கல் வீசி தாக்கி விட்டு செல்வதும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இது குறித்து கிறிஸ்டியன் பாபு கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிறுவன் மாயமான செய்தி வாட்ஸ் அப்பில் அப்பகுதி மக்களிடைய வேகமாக பரவியுள்ளது. நேற்று இரவிபுதூர்கடை பகுதியில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் மாஸ்க் அணிந்து சென்ற மாணவன் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். வாட்ஸ் அப்பில் பார்த்த சிறுவன் போல் இருக்கிறது என சந்தேகமடைந்த பாதிரியார் மாஸ்கை கழட்ட கூறியுள்ளார். உடனே ஓட்டம்படித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து பாதிரியாரிடம் அழைத்து வந்தனர்.
பாதிரியார் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த பெற்றோர் சிறுவனிடம் எங்கு சென்றாய் ? என கேட்டதற்கு எனக்கு ஒன்றுமே ஞாபகம் இல்லை என அழுதுள்ளார். பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


