கன்னியாகுமரி, மார்ச் 23 –
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம், சன்செட் பாயிண்ட் பகுதியில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குறிப்பாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பிரம்மாண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இக்கையெழுத்து இயக்கத்தினை உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார் துவக்கி வைத்தார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றனர்.
மேலும் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்டில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கடற்கரை ஓரமுள்ள பாறைகளில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டது.
தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இணைந்து, தேர்தல் சின்னங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட ரங்கோலி கோலங்களை வடிவமைத்திருந்தனர். மேலும், வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.



