மார்த்தாண்டம், மார்ச் 21 –
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக கிளை தலைவர் சல்மான் பாரிஸ் தலைமையில் இத்கா, கடல் கரை திடலில் ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்புத்தொழுகையில் 100 மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கு பிறகு மாவட்ட பேச்சாளர் ஆஷிக் மிஷ்க் தொழுகையில் ஒரு அங்கமான குத்பா எனப்படும் உரை நிகழ்த்தினார். அவர் தன் உரையில் 30 நாட்கள் நோன்பிருந்தது இறையச்சத்தை அதிகரிப்பதற்கான ஒரு அழகிய பயிற்சி, வெறும் பசியோடும் தாகத்தோடும் இருந்ததோடு மட்டும் அல்லாமல் தவறான பேச்சுககளையும் நடவடிக்கைகளையும் விட்டு விலகி இருந்து நாம் எடுத்த பயிற்சி நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்றார்.
வளைகுடா நாட்டில் பெருநாளை நிம்மதியாக கொண்டாட முடியாமல் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்காக உளமாற பிரார்த்திக்கின்றோம் என்று கூறினார்.
தொடர்ந்து ஏழை எளிய மக்களும் இப்பெருநாளை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் எனும் நோக்கில் தொழுகைக்கு முன்னரே கட்டாயமாக கொடுக்க வேண்டிய பித்ரா எனும் தருமத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய மக்கள் இத்தொழுகையிலும், அதன் பிறகான குத்பா உரையிலும் கலந்து கொண்டார்கள்.



