தருமபுரி, மார்ச் 10 –
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி டவுன் பஞ்சாயத்து. பாப்பாரப்பட்டி மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நிலம் வாங்கும் போதும், விற்கும்போதும், வீடு வாங்கும்போதும், விற்கும் போதும் பத்திர பதிவு செய்ய பென்னகரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுவர வேண்டி நிலை இருந்து வந்தது.
இதனால் இப்பகுதி பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு பார்ப்பாரப்பட்டியில் சார் பதிவாளர் அலுவலகம் தொடங்க வேண்டுமென பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி சட்டசபையில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பாப்பாரப்பட்டியில் சார் பதிவாளர் அலுவலகத்தை துவக்கி வைத்ததை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், வினோத், நகர செயலாளர் செந்தில், ஒன்றிய தலைவர் செல்வகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.



