நாகர்கோவில், பிப். 23 –
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் வருகையை முன்னிட்டு மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; குண்டும் குழியுமான சாலைகளை சீரமைப்பதும், சாலை ஓரங்களில் உள்ள கழிவு மண் மற்றும் குப்பைகளை இல்லாத வகையில் 24 நான்கு மணிநேரமும் தூய்மை படுத்தும் பணிகளும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆனால் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் இருந்து டெரிக் சந்திப்பு செல்லும் சாலை பல மாதங்களாக சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதோடு இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பல செய்திகள் வெளிவந்தும் நாகர்கோவில் மாநகராட்சி தற்காலிக நடவடிக்கையான ஜல்லி கற்களை கொட்டி செல்கிறது. சாலைகள் அமைக்கும் போது ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகாலை அடைத்து தார் சாலை போடப்பட்டதால் மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்ததது.
சாலைகள் அமைக்கும் போது அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பதால் இதுபோன்று பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டாவது இந்த சாலைக்கு ஒரு விடியல் வரும் என பள்ளி மாணவர்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை எதிர்பார்த்தும் பலன் இல்லாமல் கிடைக்கிறது.
தமிழக முதல்வர் நாகர்கோவில் வருகை தரும் போது இந்த சாலையை சீரமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!



