மார்த்தாண்டம், பிப். 16 –
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்தும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்வதை கண்டித்தும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தலைமையில் நடைபயணம் நடைபெற்று வருகிறது.
இன்று 9-வது நாளாக இரையுமன் துறையிலிருந்து இருந்து தொடங்கி பூத்துறை வரை நடைபெற்றது. பாதயாத்திரையில் மத்திய பாஜக அரசு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: மத்திய அரசு 100-வேலை திட்டத்தை எவ்வாறு முடக்க நினைக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த நடைபயணம் மூலம் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்கப்பார்கிறார்கள். தற்போது வேலை கொடுக்காமல் இந்த திட்டத்தை முடக்கப்பார்கிறார்கள் என கூறினார்.
பாத யாத்திரையில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஸ், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுசெயலாளர் முகம்மது ஷாயித், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி லைலா ரவிசங்கர் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவ கிராம காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



