திருவெண்ணெய்நல்லூர், பிப். 07 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (30). இவர் கோயம்புத்தூரில் பழம் மார்க்கெட்டில் வேலை பார்த்துக் கொண்டு மனைவி மீனா (25) மற்றும் 2 குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி தைப்பூச விழாவிற்காக கோயம்புத்தூரில் இருந்து பாவந்தூர் கிராமத்திற்கு வந்த சிவா தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி தனலட்சுமி (65), நேற்று தனது மகள் மீனாவை பார்ப்பதற்காக பாவந்தூர் சென்றுள்ளார். அன்று இரவு 11 மணியளவில் திடீரென சிவா அவரது மனைவி மீனா இடையே தகராறு ஏற்பட்டு மீனாவை அடித்துள்ளார். அப்போது தடுக்கச் சென்ற மாமியார் தனலட்சுமியை இரும்பு பைப்பால் தலையில் அடித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீனா தலையில் பலத்த காயம் அடைந்தார்.
தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த தனலட்சுமி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் மீனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சிவாவை தேடி வந்த நிலையில், இன்று இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சிவாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மாமியாரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



