குளச்சல், ஜன. 30 –
ஆலஞ்சி அருகே கல்லுவிளை பகுதியில் சவேரியார் ஆலய பங்குக்குட்பட்ட புனித ஜார்ஜியார் குருசடி உள்ளது. இந்த குருசடியில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக இரும்பால் செய்யப்பட்ட உண்டியல் ஒன்று உள்ளது. இன்று அதிகாலை மர்ம நபர்கள் குருசடிக்கு வந்து உண்டியலை உடைத்துள்ளனர். அப்போது அங்கு பொதுமக்கள் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து காலையில் உண்டியல் உடைக்கப்பட்ட தகவல் அறிந்து பங்கு மக்கள் ஆலயத்தில் திரண்டனர். உண்டியலை பரிசோதித்த போது அதிலிருந்து சில ரூபாய் நோட்டுகள், சில்லறைகளை திருடியுள்ளனர். இது குறித்து பங்குச்செயலாளர் சுபின் ஆண்டனி (28) என்பவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குருசடி உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



