நாகர்கோவில், ஜன. 30 –
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
நாகர்கோவில் மாநகரில் குடிநீர் கேன்களை சரக்கு ஆட்டோக்களில் விற்பனைக்காக கொண்டு செல்பவர்கள் மூடாமல் வெயிலில் தான் கொண்டு செல்கின்றனர். குடிநீர் கேன்களில் நேரடியாக சூரிய ஒளி படும்போது அதன் தன்மை மாறி பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. தற்போது பெரும்பாலான வீடுகள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்வுகளிலும் குடிநீர் கேன்களை தான் பொதுமக்கள் வாங்கி குடிக்கின்றனர். ஆனால் வெயிலில் சூடாகி வரும் தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குளிர்பானங்கள், குடிநீர் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட எந்த திரவ பொருளாக இருந்தாலும் அதனை நேரடியாக சூரிய ஒளியில் படும்படி வைக்க கூடாது என அந்த பாட்டில்களிலேயே குறிப்பிட்டிருப்பதை காணலாம். இதில் அத்தியாவசிய பொருளான குடிநீர் கேன்களை மூடாமல் வாகனங்கள் மூலம் கொளுத்தும் வெயிலில் கொண்டு செல்வதால் அந்த குடிநீர் பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாகனங்களில் குடிநீர் கேன்கள் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து முகவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பான முறையில் தண்ணீர் கேன்கள் கொண்டு செல்ல அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



