சுசீந்திரம், ஜன. 28 –
சுசீந்திரம் அருகே உள்ள மணக்குடி பகுதியில் நேற்று சிறு குழந்தைகள் உட்பட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்து குதறியது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மணக்குடி ஊராட்சி மன்றம் அருகே உள்ள வடக்கு பகுதியில் சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தெருநாய்கள் இரண்டு குழந்தைகளை கடித்து குதறியது. மேலும் பெரியவர்களையும் நாய்கள் கடித்து குதறி உள்ளது. இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரில் கூறும்போது: மணக்குடி பகுதியில் தற்போது தெருநாய்களின் தொந்தரவு அதிகமாகி உள்ளது. ஆங்காங்கே உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் சிறு நாய்களை இந்தப் பகுதியில் விட்டு சென்றுள்ளனர். இதனால் மணக்குடி பகுதி முழுவதும் தெருநாய்கள் அதிகரித்து உள்ளது.
அடிக்கடி இதுபோல தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று இது போல விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர் சிறுமியையும் பொதுமக்களையும் நாய் கடித்து குதறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மணக்குடி பகுதியில் உள்ள தெருநாய்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.



