தக்கலை, ஜன. 22 –
தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பாலப்பள்ளி என்ற பகுதியில் சென்ற போது அங்கு சந்தேகப்படும்படி 2 பேர் நின்றுள்ளனர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் இரண்டு பேரும் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் பேட்டரி திருடிய வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கார் ஷோரூம் உரிமையாளர் ரெஜின் கொடுத்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஒப்பிட்டு பார்த்தனர். அதன் மூலம்
பிடிபட்ட இரண்டு பேரும் கார் பேட்டரி திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்தது. பின்னர் அவர்கள் திருடியதை ஒப்புக் கொண்டவர்கள். தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தொடர் விசாரணையில் அவர்கள் இரணியலில் உள்ள நெய்யூர் பகுதி சேர்ந்த சுபின் (38), சாமியார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் (33) என தெரியவந்தது. இவர்கள் அந்தப் பகுதியில் மேலும் 14 கார்களில் பேட்டரிகளை திருடியிருப்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


