சுசீந்திரம், ஜன. 14 –
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், சங்கரநாராயணன், ரவி, பிரவீன்ரகு, ஜெஃப்ரி மோள், சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து நேற்று கன்னியாகுமரியில் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள், உட்பட 12 கடைகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, உணவு தொழில் சார்ந்த கடைகளில் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு முறை பயன்படக் கூடிய 12.500 கிலோ எடையுள்ள பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதுடன் அவற்றை பயன்படுத்திய 2 உணவகங்களுக்கு தலா 5000 வீதம் மொத்தம் ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தயாரித்து விற்பனை செய்த பிறகு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மற்றும் கெட்டுப்போன இறைச்சி உணவு, நூடுல்ஸ், சாதம், உருளைக்கிழங்கு மசாலா போன்ற 95 கிலோ எடையுள்ள பழைய உணவு பொருட்கள் கண்டு பிடித்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதுடன் இது போன்ற சுகாதாரமற்ற 4 உணவகங்களுக்கு தலா ரூ 3000 வீதம் மொத்தம் 12000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இது போன்ற உணவின் தரம் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



