கன்னியாகுமரி, ஜன. 12 –
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று வார விடுமுறை கடைசி நாளையொட்டி கன்னியாகுமரியில் காலையிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் கணிசமான அளவில் இருந்தது. இதனால் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு கடலில் இருந்து உதயமாகும் கதிரவனை காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் லேசான மேகமூட்டம் நிலவியதால் பின்னர் சிறிது நேரத்திற்கு பின் சூரிய உதயத்தை கண்டு களித்து ரசித்தனர். பெரும்பாலானார் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு அங்குள்ள பகவதி அம்மன் கோவில் உட்பட்ட பல கோயில்களில் சென்று தரிசனம் செய்தனர். இதனால் கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதையடுத்து காந்தி, காமராஜர் மண்டபங்களில், காட்சி கோபுரம் போன்ற இடங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திலும் படகில் டிக்கெட் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



