நாகர்கோவில், ஜன.11-
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டமும் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து இன்று நடைபெற்றது.
வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
இம்முகாமில் 121 முன்னனி தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் திறன்பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டன. சுயதொழிலுக்கு ஊக்குவிக்கும் முகமாக மாவட்ட தொழில் மையம், IOB RSETI, தாட்கோ ஆகிய அரசு அலுவலகங்கள் மூலம் தனி அரங்கு அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அறிவுரைகளும் வழங்கப்பட்டது. முகாமில் 2196 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் 604 வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர். 318 வேலைநாடுநர்கள் முதற்கட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டனர்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) டாக்டர்.கா.சண்முகசுந்தர், மகளிர் திட்ட இயக்குநர் சா.பத்ஹீ முகமது நசீர், மாவட்ட திறன் பயிற்சி அலுவக உதவி இயக்குநர், லட்சுமிகாந்தன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆ.பொ.ஆறுமுக வெங்கடேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



