கன்னியாகுமரி, ஜன. 2 –
அஞ்சுகிராமம் பகுதி பால்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து என்ற கொண்டைமாரி (34). இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தற்போது கன்னியாகுரி அருகே கண்டன்பரப்பு, நாச்சியார் குளக்கரையில் வசித்து வந்தனர்.
மாரிமுத்து சொந்தமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் வைத்து வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து மாரியம்மாள் தனது கணவரை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. கணவரை கண்டுபிடிக்க கோரி மாரியம்மாள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வந்தனர். இந்த நிலையில் மாரிமுத்து லீபுரம் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாரிமுத்துவை யாரோ அரிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாரிமுத்து அதே பகுதியில் 4 பேருடன் சேர்ந்து ஒன்றாக மது குடித்துள்ளதும், அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதும் தெரிந்தது.
அந்த மோதலில் மாரிமுத்து அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அவரிடம் சேர்ந்து மது அருந்திய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட மாரிமுத்து மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.


