சுசீந்திரம், டிச. 26 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழிப் பெருந்திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு மார்கழிப் பெருந்திருவிழாவிற்காக நேற்று முன்தினம் மாலை மரபு படி கோட்டார் பட்டாரியார் சமுதாயத்தில் இருந்து கொடி பட்டம் கோட்டார் விநாயகர் கோவில் முன்பு வைத்து அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ரத வீதியை சுற்றி வந்து கோவில் நிர்வாகிகளிடம் கொடிபட்டத்தை கொடுத்தனர். நேற்று காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் கொடி மரத்திற்கு வட்ட பள்ளி மடம் பிரசாத் நம்பூதிரி பூஜைகள் செய்தார். தெற்கு மண் மடம் திலீப் நம்பூதிரி கொடியேற்றினார்.
கொடியேற்று நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், அறநிலைத்துறை முன்னாள் அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா உட்பட பொதுமக்கள் பெரும் அளவு கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு திருவெம்பாவை பாராயணம் காலை 10:30 மணிக்கு திருமுறை பெட்டக ஊர்வலமும் நடைபெற்றது.
இரண்டாம் திருவிழாவான நாளை காலை 4 மணிக்கு அருள்மிகு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலவரும் நிகழ்ச்சியும் காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை 5.30 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மூன்றாம் திருவிழா அன்று காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் காலை 8:30 மணிக்கு திருவெம்பாவை இசையும் காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் 8.30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு இரவு 9 மணிக்கு பக்தி மெல்லிசையும் இரவு 10 மணிக்கு கர்ப்பக விருட்சக வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 10:30 மணிக்கு தனது தாய், தந்தையர்களுக்கு நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கோட்டாறு அருள்மிகு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்ரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் சுவாமி அம்பாள் கிழக்கு திசை நோக்கி நிற்க மூன்று முறை வலம் வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நான்காம் திருவிழா அன்று காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் இரவு 10:30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் 5-ம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும் கருட வாகனத்தில் பெருமாளும் அன்ன வாகனத்தில் அம்பாளும் திருவீதிஉலா வரும் பஞ்சமூர்த்தி தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காலை 6 மணி அளவில் தாணுமாலய சுவாமி கோவில் தெற்கு பாகத்தில் அமைந்துள்ள வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி அம்பாள்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து கிழக்கு திசை நோக்கி நிற்க கருடன் சுவாமியையும் கோவில் கோபுரத்தையும் மூன்று முறை வலம் வரும் கருட தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அஷ்டாபிஷேகமும் இரவு 10:30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஆறாம் திருவிழா அன்று காலை 9 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் ஏழாம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு சுவாமி பெருமாள்அம்பாள் பல்லக்கு வாகனத்தில் வீதிஉலாவரும் நிகழ்ச்சியும் மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. எட்டாம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு சிதம்பரேசுவர்திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஒன்பதாம் திருவிழா அன்று காலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் காலை 9 15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயகரும் அம்மன் தேரில் அம்மனும் சுவாமி தேரில் சுவாமியும் அமரச் செய்து தேரை தொட்டிழுக்கும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தந்த பல்லுக்கு வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 12 மணி அளவில் சப்தவர்ணக் காட்சி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பத்தாம் திருவிழா அன்று காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் இரவு 9:30 மணிக்கு திரு ஆராட்டும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



