மார்த்தாண்டம், டிச. 20 –
திருவட்டாறு சுற்று வட்டார பகுதிகளுக்கு உட்பட்ட பூந்தோப்பு, வேர்கிளம்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 பைக்குகள் திருட்டு போனது. இது குறித்து பைக்கின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் களியக்காவிளை போலீசார் நேற்று குமரி – கேரளா எல்லைப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சஜித்கான் ( 25) என்பதும் அவர் திருவட்டாறு பகுதியில் 3 பைக்குகள் திருடியதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை கைது செய்து விசாரித்ததில் சஜித்கான் கேரள மாநிலத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் போக்சோ வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதை எடுத்து திருவட்டார் போலீசார் சஜித்கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



