நாகர்கோவில், டிச. 17 –
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் உக்கிர பாண்டி (23). இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அதிகாரியிடம் தகராறு ஈடுபட்டதையடுத்து உக்கிரபாண்டியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாளையங்கோட்டை சிறையிலிருந்து நாகர்கோவில் சிறைக்கு மாற்றினர்.
நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உக்கிரபாண்டி நேற்று ஜெயில் வார்டனிடம் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இரவு சிறைக்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கைதி தகராறு செய்தது தொடர்பாக நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உக்கிர பாண்டி இங்கு மட்டுமின்றி ஏற்கனவே அடைக்கப்பட்டு இருந்த பல்வேறு சிறைகளிலும் இதே போல் தகராறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


