மார்த்தாண்டம், டிச. 16 –
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ வுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 2005 இல் நிறைவேற்றப்பட்டு கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.
இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் பெரும்பாலும் பயனடைந்தவர்கள் கிராமப்புற பெண்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஆவார்கள். இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதரம் மேம்பட்டதோடு மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது மத்திய பாஜக மோடி அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலமாக 10 சதவிகிதத்தினர் மட்டும் தான் 100 நாள் வேலை வாய்ப்பை இதுவரை பெற்றுள்ளனர். மீதியுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதால் கிராமப்புற தொழிலாளர்கள் வேலை தேடி புலம் பெயர்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த நோக்கத்திற்காக 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்பட்டதோ, அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு படுகொலை செய்து வருகிறது.
தேசத்தந்தை காந்தியடிகளின் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்வதோடு கிராமப்புற ஏழை மக்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



