நாகர்கோவில், டிசம்பர் 15 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலப்பள்ளம் பேரூராட்சி, கடமான்குழி ஊர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 50க்கு மேற்பட்ட பொதுமக்கள், நாம் தமிழர் கட்சி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிம்லர் தலைமையில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிம்லர் கூறுகையில் “திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பாலப்பள்ளம் பேரூராட்சி அதிகாரிகள் விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ள எங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். மேலும் குடியிருப்புகள் நிறைந்த கடமான்குழி பகுதியில் ஆலயங்கள், பள்ளிகள் உள்ளன. மக்கள் எதிர்ப்பையும் மீறி சிறுவர் பூங்கா அமைக்க மக்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு திடக்கழிவு மேலாண்மை மையத்தை கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த திடக்கழிவு மேலாண்மை மையம் அமைந்தால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபடும். இதனால் நோய் தொற்று ஏற்படும். அதனால் இத்திட்டத்தை மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டுமென பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் அதிகாரிகள் அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக திடக்கழிவு மேலாண்மை மையத்தை கடமான்குழி பகுதியில் அமைக்க விடமால், மாற்று இடத்தில் அமைக்க வேண்டுமென மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.



