குளச்சல், டிச. 10 –
குளச்சல் அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் பென்னஸ் (35). கொத்தனார். இன்று அந்த பகுதியில் காங்கிரீட் வேலை நடைபெற்றது. வேலை முடிந்து இரவு அங்குள்ள பாம்பூரி வாய்க்காலில் குளிக்க சென்றார். காலில் காங்கிரீட் ஷூ அணிந்திருந்தார்.
தண்ணீரில் இறங்கி குளிக்க தொடங்கிய போது பென்னஸ் காலில் ஏதோ சுற்றுவது தெரிந்தது. உடனே உதறிக்கொண்டு கரை ஏறினார். தண்ணீரில் பார்த்தபோது மலைப்பாம்பு கிடந்தது தெரிய வந்தது. காலில் காங்கிரீட் ஷு அணிந்திருந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. உடனே சத்தமிட்டார். உடனடி அப்பகுதியினர் குவிந்தனர்.
இதை அறிந்த குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயசிங் திங்கள் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து நிலைய அதிகாரி சரவண ஐயப்பன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி மலை பாம்பை பத்திரமாக பிடித்தனர்.
பிடிபட்ட பாம்பு சுமார் 10 அடி நீளம் உள்ளதாக காணப்பட்டது. சிக்கிய மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு மலை பாம்பு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கோழி பிடித்து சென்ற காட்சி சிசிடி கேமராவில் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



