ஈரோடு, நவ. 26 –
இன்றைய நவீனத் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு அடித்தளமான தந்தை பெரியாரை தந்த இந்த ஈரோட்டுக்கு திராவிட இயக்கத்தின் முதன்மைத் தொண்டனான நான் பெருமையோடு இங்கே வந்திருக்கிறேன். ஈரோட்டுப் பூகம்பம் தந்தை பெரியார் இல்லையென்றால், திராவிட இயக்கம் இல்லை: பேரறிஞர் அண்ணா இல்லை. முத்தமிழறிஞர் கலைஞர் இல்லை; ஏன், தமிழ்நாட்டிற்கு இந்தளவுக்கு வளர்ச்சியும் இருந்திருக்காது.
இந்த மாபெரும் விழாவில், 91 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி 235 கோடியே 73 இலட்சம் ரூபாய் 790 முடிவுற்ற திறந்து வைத்து 1 இலட்சத்து 84 ஆயிரத்து 491 பேருக்கு. 278 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று, 605 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு இன்றைக்கு கிடைத்திருக்கிறது.
நான் ஒரு விவசாயி இப்போதும் விவசாயம் செய்கிறேன் என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் ஒரு துரோகி, இப்போதும் தொடர்ந்து துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லலாமே தவிர அவரை விவசாயி என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகிவிடும்!
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிராகரித்துவிட்டது. பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? பிரதமர் அவர்களே தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்கவேண்டும் என்று அவர் சொல்லி இருக்க வேண்டுமா? வேண்டாமா? டெல்லியில் பல கார்களில் மாறி மாறி சென்று யார் யாரையோ சந்திக்கிறீர்களே?
தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்க பிரதமரை சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள்… நீங்கள் சொன்னால் போதும்…. தமிழ்நாடு அரசு சார்பில் நானே உங்களுக்கு காருக்கு ஏற்பாடு செய்து அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல வண்டியாக ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன். பழனிசாமி இந்த மேற்கு மண்டலத்திற்கு இழைத்த பச்சைத் துரோகப் பட்டியலில், லேட்டஸ்ட் அடிஷன் கோவை மெட்ரோ ரயில் துரோகம். சென்னையை போல, கோவை மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கும், மெட்ரோ ரயில் தேவை என்று நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு அதையும் நிராகரித்திருக்கிறது.
தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த மண்டலத்துக்கு இதுபோன்ற செய்திருக்கின்றாரா? அப்படி என்று நான் கேட்க விரும்பவில்லை! அவர் செய்தது எல்லாம் என்ன? வெறும் துரோகம்தான்! பச்சைத் துண்டை அணிந்து கொண்டு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பழனிசாமி பச்சைத் துரோகம் செய்கிறார் என்று நான் சொன்னதும் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத தமிழ்நாடு எதைக் கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறது பா.ஜ.க.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்’ என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதேபோல, பா.ஜ.க.வைச் சேர்ந்த கோவை சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், திமுக ஆட்சியில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால்தான் கோவை, மதுரை மக்களை பா.ஜ.க. பழிவாங்குகின்றது என்று ஒப்புதல் வாக்குமூலமே வழங்கியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்ற குடைச்சல் போதாது என்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக கெடுக்க வேண்டும் என்றே ஒருவரை பாஜக ஆளுநரை நியமித்திருக்கிறார்கள்.
அவர் சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதை கேட்டதுமே, சிரிப்புதான் வந்தது தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறதாம். தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம் தமிழ்மொழி வளர்ச்சிக்காக இங்கே எதுவும் நடக்கவில்லையாம் எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம். இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார் ஆளுநர்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தான் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தான் டெல்லி செங்கோட்டை அருகில் குண்டுவெடிப்பு நடந்து அங்கே மக்கள் பல பேர் பலியானார்கள். பா.ஜ.க. ஆட்சியில் தான் மணிப்பூர் பற்றி இன்றைக்கு எரிந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற ஆளுநர் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும்.
இக்கட்டான சூழல்களில் எல்லாம், தன்னுடைய தேசப்பற்றைக் காட்டி நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான்! அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதுபோல பேசுகிறார். அவர் வகிக்கின்ற அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு இது!
எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில், உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம்! இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்யுடன் இருக்கும் என்றால், அதற்கு காரணமே தமிழ்நாடு உயிரைக் கொடுத்து மொழிப்போரில் ஈடுபட்டதுதான்! தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம்! அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் வேலு, நேரு, முத்துசாமி, முத்தூர் சாமிநாதன், கயல்விழி, மதிவேந்தன், எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், சந்திரகுமார் எம்எல்ஏ, ஏ ஜி வெங்கடாசலம் எம் எல் ஏ, சுப்பராயன் எம் எல் ஏ மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



