நாகர்கோவில், நவம்பர் 24 –
உலக நவீன வாசக்டமி (ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நலம்) இரண்டு வார விழிப்புணர்வு பிரச்சாரப் பயண ஊர்தி இன்று கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கியது. குடும்ப நல துணை இயக்குனர் ரவிக்குமார் விளக்க கையேடு, முகாம் தேதிகள் அடங்கிய நோட்டீஸ் களை வெளியிட்டு பிரசார வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கிராமிய தப்பாட்டம் கலைஞர்களால் இசைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ரமேஷ் செய்தார். புள்ளியியல் உதவியாளர் சாந்தி நன்றி கூறினார். விழாவில் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர்கள், இணை இயக்குனர் மற்றும் குடும்ப நல அலுவலக டாக்டர் சுமதி, பணியாளர்கள் கலந்து கொண்டனர். டாக்டர்கள் கூறுகையில், ரத்த சோகை, இதய நோய், அதிக உடல் பருமன், தைராய்டு பிரசனை, வெட்டுவாத நரம்பு நோய்கள், மயக்க மருந்து ஒவ்வாமை போன்ற மருத்துவ காரணங்களால் பெண்களுக்கு நிரந்தர அறுவை சிகிச்சை செய்ய இயலாத போது, அந்த பெண்ணின் கணவருக்கு நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சை ஏற்றுக் கொள்வது குடும்பத்திற்கு நல்லது. ஆண்களுக்கு இந்த சிகிச்சையை ஏற்றுக் கொள்ள மயக்க மருந்து தேவையில்லை.
மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மட்டும் செய்து கொண்டு ஒரு சில நிமிடங்களில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் செய்யப்படுகிறது. இந்த பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகை ரூ.1100 மற்றும் ஒரு வெள்ளி நாணயமும் உடனே வழங்கப்படும். அன்றே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்று விடலாம். சிறிது ஓய்விற்கு பிறகு அன்றாட பணிகளில் ஈடுபடலாம். மூன்று மாத காலம் மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். பின் இல்லற வாழ்விலும், உடல் நலனிலும் எந்த குறையும் இருக்காது என்றனர். 28ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை சிறப்பு முகாம்களும் நடைபெறுகிறது.


