சுசீந்திரம், நவ. 21 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்று வந்தபோது திடீரென தெப்பக்குளம் வடக்கு பகுதியில் சுமார் 30 அடி நீளத்திற்கு தெப்பக்குள தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் தற்கால தடுப்புச் சுவர் கட்டும் பணிக்காக சாக்கு மூட்டைகளில் மண் அடைத்து தற்கால தடுப்புச் சுவர் எழுப்பி உள்ளனர். தடுப்புச் சுவர் போர்க்கால அடிப்படையில் வேலை நடைபெற்று வருகிறது. அதற்காக தெப்பக்குளம் நடுவே தடுப்புச் சுவர் கட்டுவதற்கான சாதனங்களை கொண்டு செல்வதற்கு பாதையும் அமைக்கப்பட்டு வேலை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் டாக்டர் ஜெயா அவர்கள் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது. தெப்பக்குளம் மண் நெகிழும் தன்மையில் சுமார் மூன்றரை மீட்டர் ஆழம் தொளி இருந்துள்ளது. மேலும் தெப்பக்குள தடுப்புச் சுவர் அருகே உள்ள பாதையில் தற்சமயம் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அந்த அலங்கார கற்கள் வழியாக மழை நீர் புகுந்து மண் நெகிழும் தன்மையில் இருந்துள்ளது. இந்நிலையில் தெப்பக்குளத்தில் தொளி எடுத்து அப்புறப்படுத்தியதால் தடுப்பு சுவர் அப்படியே இருப்பு இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது கடந்த 15ஆம் தேதி சென்னையில் இருந்து வந்திருந்த மாநில கட்டுமான குழு விரிவுரையாளரும் முதன்மை பொறியாளருமான முத்துசாமி தலைமையில் வந்த குழுவினரும் தெப்பக்குளத்தை முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை சென்னையில் சமர்ப்பித்து உள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் வந்துள்ள முனைவர் ஜெயா தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்த அறிக்கையை சென்னையில் சமர்ப்பிக்க உள்ளனர். இவரது அறிக்கையை பார்த்து பழமை மாறாமல் மேலும் சேதம் ஏற்படாத வகையில் தெப்பக்குளத்தை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
இது குறித்து வயதான பெரியவர் ஒருவர் கூறும் போது: குளம் மிகவும் பழமையானது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குளம் இந்த குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யும்போது கேரள முறைப்படி தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும். ஒருவேளை வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் இது போல அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலை உள்ளதால் கேரள தேவப்பிரசன்னம் பார்க்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.



