மார்த்தாண்டம், நவ. 10 –
பளுகல் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் ஜிபின் ராஜ் (28). கொத்தனார் வேலை செய்கிறார். இவருக்கும் ஆன்சி மோள் (25) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் ஜிபின் ராஜ் கடந்த 5ம் தேதி பைக்கில் தனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றார். நண்பரை பார்த்து விட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்படும் போது, திடீரென பைக் நிலை தடுமாறியதில் அங்குள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜிபின் ராஜை அக்கம்பக்கத்தினர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ஜிபின் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஆன்சி மோள் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


