கன்னியாகுமரி, நவ. 6 –
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், முக்கடல் சங்கமம் கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.
பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான கடற்கரை நடைபாதை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகள், சுற்றுலா பயணிகளின் நடைபாதையை மறைத்து இடையூறு ஏற்படுத்தியதோடு சுகாதார சீர்கேடு மற்றும் கடலின் அழகை உட்கார்ந்து கண்டுகளிக்க இடையூறாக இந்த கடைகள் இருந்து வந்தது. இது குறித்த புகார்கள் அடிக்கடி எழுந்தன. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உத்தரவின்பேரில் இன்று டிஎஸ்பி ஜெயசந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நடைபாதையில் கடைகள் அமைத்திருந்த விற்பனையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று அனைத்து தற்காலிக கடைகளும் அகற்றப்பட்டன. ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டதையடுத்து நடைபாதை பகுதியில் சுத்தமாகவும் பரந்தவிடமாகவும் மாறியுள்ளது. அழகாக கடல் காட்சியை எந்த இடையூறும் இன்றி ரசிக்கலாம்.



