நாகர்கோவில், நவ. 6 –
நாகர்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேற்று இரவு நாகர்கோவில் மணிமேடை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அஜய் ராஜா, ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு முன் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் போலீஸ் நிலையத்தில் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருடியது ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மார்த்தாண்டம் பல்லன் விளை பகுதி சேர்ந்த பிரஜித் என்ற பிரவீன் (34) என்பது தெரிய வந்தது.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக திருச்சி பகுதியில் போலீசார் இவரை வழக்கு ஒன்றில் கைது செய்து திருச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர். அப்போது போலீஸ் பிடியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரவீன் தப்பி வந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக திருச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



