கோவை, நவ. 05 –
கோவை மாவட்டம் பிளிச்சி கிராமத்தில் உள்ள ஒன்னிப்பாளையம் ஸ்ரீ எல்லை கருப்பராயன் கோவிலில் நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு பூஜையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பௌர்ணமியை ஒட்டி நடைபெற்ற பத்தாயிரத்து எட்டு (10,008) மகளிர் கலந்து கொண்ட விளக்கு பூஜை நிகழ்ச்சியையும் குடியரசுத் துணைத் தலைவர் விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அப்போது பேசியவர், இந்த சமூகம் நன்மை பெற வேண்டும் என்பதற்காக இந்த பூஜை இங்கு நடத்தப்படுகிறது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் எந்த நேரத்திலும் மகளிர் வெளியே செல்லும்போது அவர்களுக்கு சிறு கெடுதல் கூட நடக்கக் கூடாது என்பது தான் நமது பிரார்த்தனையாக உள்ளது.
கோவையில் நடந்த பாலியல் சம்பவம் வேதனையை தந்துள்ளது. நமக்காக பிரார்த்தனை செய்வதோடு, அனைவரின் நன்மைக்காகவும் வேண்டிக் கொள்ளும் மனம் நமக்கு கிடைக்க இறைவன் அருள் புரிய வேண்டும். நல்ல சிந்தனைகளால் தான் நல்ல சமுதாயத்தை படைக்க முடியும். அதற்கான பலத்தை இறைவன் நமக்கு தருவான் என தெரிவித்தார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு வருத்தங்களை தெரிவித்ததோடு குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.



