ஈரோடு, நவ. 5 –
ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான தோல் மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் அரசு மற்றும் கோர்ட்டின் விதிமுறைகள் சரியாக செயல்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவின் பேரில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 45 பட்டறைகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டது. இதில் ஈரோடு பெரிய அக்ரகாரத்தில் செயல்பட்ட ஒரு தோல் தொழிற்சாலை உள்பட 4 தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்ட 7 சாயப்பட்டறைகள், 14 சாயம் மற்றும் பிரிண்டிங் பட்டறைகள், ஒரு டையிங் பட்டறை, சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு டையிங் பட்டறை சீல் வைக்கப்பட்டுள்ளது
இந்த சோதனையில் மாசு கட்டுப்பாட்டு என்ஜினீயர் ராஜ் குமார் உதவி என்ஜினீயர் தீனதயாளன் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இது பற்றி மாசு கட்டுப்பாட்டு என்ஜினீயர் ராஜ் குமார் கூறும் போது விதிமுறைகளை மீறி செயல்படும் தோல் மற்றும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


