தக்கலை, நவ. 1 –
குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை அமைத்து வரும் 4 வழிச்சாலைக்காக பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டு வருவதுடன் தரமற்ற முறையில் பல்வேறு குளறுபடிகளுடன் சாலைப் பணிகள் நடைபெற்று வருவது சம்பந்தமாக ஏற்கனவே புகார் உள்ளது. இதைத் தொடர்ந்து நீர் நிலைகளை அழிக்காமல் தரமான முறையில் சாலை அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை உட்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் தற்போது நீர்வளத்துறை தக்கலை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள திக்கணங்கோடு சேனலில் நான்கு வழிச்சாலை தொட்டி பாலத்தையொட்டி நாற்கர சாலையோர இனைப்பு சாலையின் வடிகால் தண்ணீர் நேரடியாக திக்கணங்கோடு சேனலுக்குள் பாயும் விதத்தில் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதனை நீர்வளத்துறை உட்பட மாநில அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் மழைக்காலங்களில் பெருவெள்ளம் நேரடியாக சேனலுக்குள் பாய்ந்து, சேனல் உடையும் என்பதோடு தொட்டி பாலத்தை ஒட்டிய பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கி நாற்கரச்சாலைக்குள் கசிவதோடு உயரமான அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு தொட்டி பாலமே சாயவும் . உயிர் இழப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது சிலதினங்கள் பெய்த மழையில் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு நாற்கர சாலைக்குள் விழுந்து கிடக்கிறது.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ எடுத்துச் சென்றார். இதையடுத்து தவறு செய்த தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டும், உரிய ஆய்வு செய்தும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுபடி – ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெங்கின் பிரபாகர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தக்கலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் தனித்தனியாக அப்பகுதியில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
குமரி மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து வருவதால் குமரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது தரமான முறையில் குளறுபடிகளின்றி பணிகள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் குமரி மாவட்ட மக்களும் , நீர்நிலைகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகளும் உள்ளனர்



