மார்த்தாண்டம், அக். 27 –
திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரின் மகள் ஒருவர் எம்சிஏ பட்டதாரி ஆக உள்ளார். இவருக்கும் புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த வாலிபர் பெங்களூருவில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று 27ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது. இதனால் திருமணத்திற்கு முந்தின நாள் 26 ஆம் தேதி மாலை உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பெண் வீட்டார் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சூழலில் பெண்ணின் தந்தைக்கு மணமகனின் மாமா என்று ஒருவர் போனில் பேசியுள்ளார். அதில் மணமகன் பெங்களூருவில் ஒரு வழக்கில் கைதாகி உள்ளதாகவும், உங்கள் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதை அடுத்து திருமண வரவேற்பை நிறுத்தி விட்டு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மனமகனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மணமகன் மற்றும் அவரது பெற்றோரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. தொடர்ந்து பெண் வீட்டார் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வாலிபர் வேலை பார்த்த பெங்களூர் ஐடி நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். தொடர்ந்து பெங்களூரு போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூர் போலீசார் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சென்று விசாரித்த போது பழனியை சேர்ந்த உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் கடந்த 25ஆம் தேதி திருமணம் நடந்தது தெரிய வந்தது. ஆனால் வாலிபர் தற்போது அங்கு இல்லை என தெரிந்தது.
அதே நேரம் அவரை திருமணம் செய்த பெண் திருமணத்திற்கான ஆதாரம், போட்டோ போன்றவற்றை பெங்களூரு போலீசாரிடம் அனுப்பி உள்ளார். நாங்கள் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் திருவட்டார் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தகவலை மணப்பெண் வீட்டாருக்கு விவரம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று நடக்க இருந்த திருமணத்தை மணப்பெண் வீட்டார் ரத்து செய்தனர்.



