தக்கலை, அக். 16 –
குமரி மாவட்டத்தில் வாழ்வச்ச கோஷ்டம், காட்டாதுறை, மருதூர்குறிச்சி, முளகுமூடு, திருவிதாங்கோடு உட்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பத்மநாபபுரம் நகராட்சிக்கும் குடிநீர் வழங்குவதற்காக பத்மநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் ரூ. 220 கோடியில் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக ஆற்றூர் அருகே கல்லுபாலம் பகுதியில் ஆற்றில் கிணறுகள் அமைத்து மிகப்பெரிய ராட்சத மின்மோட்டார்கள் அமைத்து காட்டாத்துறை பகுதியில் பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் நேரடி உயர் அழுத்த மின் இணைப்புகளும் தனியாக அமைக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் பணிகள் துவக்கப்பட்டு பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணிகள் தற்போதைய ஆட்சியில் நிறைவு பெற்றது. இந்நிலையில் பணிகள் முடிந்து வெள்ளோட்டம் நடந்த போதே தரம் குறைந்த குழாய்களால் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் பெயர்ந்தது. பின்னர் பொதுமக்கள் போராட்டத்துக்கு பின்னர் ஒரு சில இடங்களில் மட்டும் சிறிதளவு சரி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர வழங்க இயலவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
மேலும் முளகுமூடு பேரூராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதற்குக் காரணம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் குடிநீர் விநியோகிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை காணப்பட்டுள்ளது.
பல நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு உள்ளாகவே செயலிழந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்ததால்தான் பணிகளை செய்த ஒப்பந்ததாரர் தரம் குறைந்த அளவில் பணி செய்ததால் தான் குறுகிய காலத்தில் மின் மோட்டார்கள் செயல்திறன் குறைந்ததும் குடிநீர் குழாய் பழுது ஆகியவை ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குறைகளை நிவர்த்தி செய்து முழு அளவில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


