திருப்பூர், அக். 11 –
மழைக்காலம் தொடங்கிய நிலையில் 4 வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டுகளில் சாக்கடை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் மண்டல தலைவா் இல.பத்மநாபன் பேசினார்.
திருப்பூர் 4 வது மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள புதிய 4ம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4 வது மண்டல உதவி ஆணையர் குமரன், உதவி பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் 15 வார்டு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் கவுன்சிலா்கள் பேசியதாவது சுபத்ரா தேவி: இடுவம்பாளையம் எவர் கிரீன் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் நடுவிலும் வீடுகளும் முன்பாகவும் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே கழிவுநீர் செல்ல நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.
சின்னச்சாமி: குடிநீர் குழாய் இணைப்பு பணியில் பல முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. பாதாள சாக்கடை பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. என்றார்.
அன்பகம் திருப்பதி:
மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்களை சட்ட விரோதமாக சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். மாநகராட்சி சொந்தமான நிலங்களை கண்டுபிடித்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக்கூடம் போன்ற பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
சேகர்:
திருப்பூரில் துப்புரவு பணியாளர்களும் சம்பள உயர்வு குறித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனைத்து வார்டுகளிலும் குப்பை மலை போல் குவிந்து காணப்படுகிறது. குப்பை கழிவுகள் தற்போது மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. காலேஜ் ரோட்டில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
சாந்தி அய்யாசாமி:
லிட்டில் பிளவர் நகர் போர்வெல் மோட்டார் பழுதடைந்து இருக்கிறது. அதை சர்வீஸ் செய்தும் சரியில்லை புதிய மோட்டார் பொருத்தி தர வேண்டும். முல்லை நகர் 3வது வீதியில் சாக்கடை கால்வாயில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. என்றார்.
மணிமேகலை ரவிச்சந்திரன்:
53வது வார்டு பகுதியில் தார் சாலைக்காக பல்வேறு இடங்களில் பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் தற்போது வரை தார் சாலை போடப்படாமல் கிடப்பில் உள்ளது. நொச்சி பாளையம் பிரிவு பகுதியில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் சாலையோரம் தேக்கமடைகிறது என்றார்.
சாந்தாமணி முருகசாமி:
மங்கலம் சாலை, கருப்பராயன் கோயில் பகுதியில் இருந்து குமரன் கல்லூரி வரை பல இடங்களில் தெருவிளக்கு பிரச்சனை உள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
கவிதா நேதாஜி கண்ணன்:
திருக்குமரன் நகர், வள்ளலார் நகர் ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுகள் வீட்டில் முன்பாக தேக்கமடைகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதன் பின்னா் மண்டல தலைவா் இல.பத்மநாபன் பேசியதாவது:
திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளா்ச்சி திட்ட பணிகள் பாரபட்சமின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர், தார் சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றிற்கு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் 4 வது மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை உடனே துர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலம் வருவதால் தெருவிளக்குகள் அனைத்து பகுதிகளிலும் எரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



