போகலூர், அக். 7 –
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் போகலூர் ஊராட்சி சேதுபதி விவேகானந்தபுரம் பகுதிக்கு மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தினமும் தங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து சேதுபதி விவேகானந்தபுரம் கிராம தலைவர் இளங்கோ ஊர் மக்கள் உடன் வந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: போகலூர் ஊராட்சி சேதுபதி விவேகானந்தபுரம் ஊரில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தற்காலிகமாக குடிநீர் இணைப்பு மூலம் மாதம் ஒருமுறை மட்டும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் உப்பு நீராக உள்ளது.
எங்கள் பகுதிக்கு குடிநீர் தினமும் தடையின்றி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே ஜூலை மாதம் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்துள்ளோம். அந்த மனு மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. குடிநீர் கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை. எங்கள் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் தடையின்றி கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.



