நாகர்கோவில், அக்டோபர் 6 –
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயும், வெளியையும் ஒரு சில இடங்களில் மனுக்கள் எழுதிக் கொடுக்கின்ற சிலர் அமர்ந்துள்ளனர்.
இதற்காக அவர்கள் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்கின்றனர். மேலும் சிலர் மனுக்கள் எழுதுவதற்காக ஆட்களை தேடி அலுவலக வளாகத்தில் அலைகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டர் அலுவலக பின் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மனுக்கள் இலவசமாக எழுதிக் கொடுக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இந்நிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பகுதியில் மனுக்கள் இலவசமாக எழுதிக் கொடுக்க உதவும் மையம் அமைக்க கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். தொடர்ந்து கோரிக்கைகளுடன் வருகின்ற மக்களுக்கு இலவசமாக மனுக்கள் எழுதி வழங்கப்படுகிறது. இதற்காக 2 அரசு பணியாளர்களும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.



