கன்னியாகுமரி, அக். 2 –
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்து காந்தி படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அக்டோபர் திங்கள் 2-ம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அபூர்வ சூரிய ஒளி அண்ணல் காந்தியடிகளின் பீடத்தில் நண்பகல் 12 மணியளவில் விழும். இதனை காண உள்ளுர் மட்டுமல்லமால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள். அதனடிப்படையில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும் சூரிய ஒளியினை பார்பதற்காகவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணல் காந்தியடிகள் இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது, உலக நாடுகளே போற்றுகின்ற வகையில் செயல்பட்டவர். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்திஜி அவர்களின் பெருமைகளையும், தியாகங்களையும், அன்னாரது அமைதி மார்க்கத்தையும், கொள்கைகளையும், அவரது வழிகாட்டுதலின்படி, நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வது, அண்ணல் காந்தியடிகள் அவர்களுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும். இவ்வாறு கூறினார்.
அதனைத்தொடர்ந்து, கர்ம வீரர் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளையொட்டி காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா. ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜர், கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையர் கண்மணி உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.



