தக்கலை, செப். 30 –
குழித்துறை அருகே உள்ள திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மகேஷ். கடந்த 26 ஆம் தேதி அன்று மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சுபின் (37) உட்பட 11 பேர் வேளாங்கண்ணிக்கு சொகுசு காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து காரில் திரும்பி சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் நேற்று தக்கலை பகுதியில் வரும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டாரஸ் லாரி மீது மோதியது. இதில் சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடுப்பாடுகள் இடையில் சிக்கிக் கொண்டனர்.
பொது மக்கள் முயற்சித்தும் அவர்களை மீட்க முடியவில்லை. உடனடியாக தக்கலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிறைய அலுவலர் ஜீவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் விமல் என்பவரும் காயமடைந்தார். கார் டிரைவர் சுபினை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



