மயிலாடுதுறை, செப்டம்பர் 27 –
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கே 1937 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் உள்நோயாளிகள் பிரிவுகளுக்காக இயங்கி வருகிறது. ரங்கூன் தேக்குகள் மற்றும் தூண்களால் அமைக்கப்பட்டு மேற்கூரை ஓடுகள் வைத்த கட்டிடத்தை இடித்து அப்புறப் படுத்தி விட்டு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய சுகாதாரம் மேம்பாட்டு கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் உள்ள அறைகள் புறநோயாளிகள் பிரிவு அவசர சிகிச்சை பிரிவு பிரசவ ஆண்டு மருந்தகம் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை அடங்கிய கட்டிடங்களை கட்ட ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆங்கிலேயர் காலத்து கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் 17 ஏக்கர் பரப்பளவிற்கு பறந்து விரிந்த நிலப்பரப்பு உள்ள நிலையில் பாரம்பரியமிக்க பழைய கட்டிடங்களை இடிக்காமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ளே புதிய கட்டிடங்களை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொறையார் பகுதி வர்த்தகர்கள் மற்றும் அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மற்றும் பொருட்கள் உள்ள நிலையில் இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக இன்று மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பவுன்ராஜ் எதிர்ப்பை மீறி கட்டிடங்களை இடித்தால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.



