திருப்பரங்குன்றம், செப். 24 –
மதுரை மாவட்டம் வளையங்குளம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் ரூபாய் 38 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பாலத்திற்கு கீழ் புதிதாக போடப்படும் 20 அடி சாலையை மேலும் கூடுதலாக 20 அடியாக மொத்தம் 40 அடி சாலையாக அகலப்படுத்த கோரி வளையங்குளம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை சார்பில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் தற்போது வளையங்குளம் பொதுமக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் இப்பகுதியில் இருந்து பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளனர். வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சாலை இதனை கடந்து செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர் .
தகவல் அறிந்து வந்த திருமங்கலம் ஏ எஸ் பி அன்சுர் நாகர் தலைமையில் போலீசார்
பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.



