சுசீந்திரம், செப். 17 –
அகஸ்தீஸ்வரம் வட்டாரம் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்டப் பயற்சி தேரூர் மகாராஜபுரம் கிராமத்தில் இலாபகரமான முறையில் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங் வரவேற்புரை வழங்கி அட்மா திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குனர் ஜாய்லின் சோபியா அவர்கள் தலைமை வகித்து தலைமையுரை வழங்கினார்.
அகஸ்தீஸ்வரம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குனர் சுனில் தத் அவர்கள் முதலமைச்சர் உழவர் நல பாதுகாப்பு திட்டம், உழவர் அட்டை, பிரதம மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டங்கள் குறித்தும் மேலும் நெல் வயலில் மீன் வளர்ப்பது குறித்தும் பயிற்சி வழங்கினார். அகஸ்தீஸ்வரம் வட்டார மீன்வளத்துறை ஆய்வாளர் அனுஷாலினி அவர்கள் பண்ணை குட்டை மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும் விரிவான பயிற்சி வழங்கினார்.
மேலும் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பில் ஈடுபட மீன் குட்டைகளை சரியான முறையில் அமைத்து மீன் குஞ்சுகளை வாங்கி உணவு அளித்து களை மற்றும் பகை மீன்களை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அறுவடை செய்து விற்க வேண்டும். விவசாயிகள் குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்ட உதவும் இந்தத் தொழிலில் அரசு மானியங்களும் கிடைக்கின்றன என தெரிவித்தார்.
இதில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் விவசாயிகளின் கைபேசியில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகள் சுய உதவி குழுக்கள் மூலம் மீன் ஊறுகாய் செய்வதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயகுமாரி, சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.



