விளாத்திகுளம், செப்டம்பர் 10 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சந்திமரிச்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆதி தமிழ்குடி சாம்பவர் குல வேளாளர் சமுதாயம் சார்பாக நடத்தும் 5-ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கைபந்தயம் நடைபெற்றது. பூஞ்சிட்டு, தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தேனி கம்பம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 58 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
போட்டியானது விளாத்திகுளம் முதல் வேம்பார் சாலையில் பூஞ்சிட்டு பந்தயத்திற்கு போக வர 5 மைல் தூரமும், தேன்சிட்டு பந்தயத்திற்கு போக வர 4 மைல் தூரம் என நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக குத்துவிளக்கு, சுழல் கோப்பை, ரொக்கப்பணம் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயங்களை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, அதிமுக முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தை கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஆ. சடையாண்டி ஆகியோர் கொடிஅசைத்து துவக்கி வைத்தனர்.



